பழனி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வேல், சேவல், மயில் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. அப்போது வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி ரத வீதிகளில் தங்க மயில், தந்த பல்லக்கு, காமதேனு, ஆட்டுக்கிடா, சப்பரம், வெள்ளியானை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் வருகிற 21ந் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது.

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது. அன்று காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் தேரேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10 நாட்களும் பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நடனம், கிராமிய பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.