கேஜ்ரிவாலின் தேர்தல் பிரச்சாரம் : உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார்

தேர்தலில் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்தால், தான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருத்ததை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார் அளித்துள்ளது.

“இடைக்கால ஜாமீனில் வெளியாகியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க முடியும்?. இது நீதிமன்றத்தை எதிர்ப்பது போன்ற செயல்” என்று அமலாக்கத் துறை தனது வாதத்தில் கடுமையாக சாட்டியுள்ளது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இவ்வாறு வாதிட்டார்.

தொடர்ந்து நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறுகையில், “நாங்கள் அளித்த தீர்ப்பு மீதான விமர்சனங்களை வரவேற்கிறோம். விமர்சனங்களுக்கும் செல்ல விரும்பவில்லை. அதேநேரம், கேஜ்ரிவால் எப்போது சரணடைய வேண்டும் என்பது நாங்கள் அளித்த உத்தரவில் தெளிவாக உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. மேலும், நடப்பது சட்டத்தின் ஆட்சி. எனவே, நாங்கள் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை” என்று கூறினார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்படி, ஜூன் 2-ம் தேதி சரணடைய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கேஜ்ரிவால், “மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகிறது. மக்களவை தேர்தலுக்கு முன் நான் கைது செய்யப்பட்டேன். திஹார் சிறையில் எனக்கு இன்சுலின் மறுக்கப்பட்டது. ஜூன் 2-ம் தேதி நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்.

ஜூன் 4-ல் சிறையில் இருந்தே தேர்தல் முடிவுகளை பார்ப்பேன். நீங்கள் இந்தியா கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜூன் 5-ம் தேதி திஹார் சிறையில் இருந்து வெளிவருவேன். இந்த தேர்தலில் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால், நான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.