41 மருந்துகளின் விலை குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை

41 மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இதில் 6 மருந்துகள் சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுபவையாகும்.

மருந்துகள் துறை மற்றும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆன்டாசிட்கள், மல்டி வைட்டமின்கள் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் ஆகியவை மலிவு விலை மருந்துகளாகும். இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல்வேறு மருந்துகளின் விலை குறைப்பு குறித்த தகவல்களை டீலர்கள், ஸ்டாக்கிஸ்டுகளுக்கு தெரியப்படுத்த மருந்து நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக என்பிபிஏ-ன் 143வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உலகிலேயே அதிக நீரிழிவு நோயாளிகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இந்நிலையில் அத்தியாவசிய மருந்துகள் விலைக் குறைப்பால் நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் மருந்தியல் துறை, கடந்த மாதம், 923 மருந்துகளுக்கான வருடாந்திர திருத்தப்பட்ட உச்சவரம்பு விலைகளையும், 65 மருந்துகளுக்கான திருத்தப்பட்ட சில்லறை விலைகளையும் வெளியிட்டது. இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.