“பெண்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன்” – சுவாதி மாலிவால் சர்ச்சை விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்தி கருத்து

“எந்த ஒரு பெண்ணுக்கு எங்கு கொடுமை நடந்தாலும், நாங்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம்” என சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “எந்த ஒரு பெண்ணுக்கு எங்கு கொடுமை நடந்தாலும், நாங்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, நான் எப்போதும் பெண்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி விவாதித்து முடிவெடுக்கும். அது அவர்களைப் பொறுத்தது” என்று பிரியங்கா தெரிவித்தார்.