6 மாதங்களில் 8 பேர் தற்கொலை: தமிழக அரசு இனியும் உறங்கக்கூடாது – ராமதாஸ் காட்டம்

ஆன்லைன் ரம்மியால் 6 மாதங்களில் 8 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இனியும் தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உறங்கக்கூடாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட்டுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டை சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சீனிவாசன் பல்வேறு தரப்பினரிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். அனைத்து பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த நிலையில், ஆன்லைன் செயலி மூலம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி, அந்த பணத்தையும் இழந்துள்ளார். தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் செயலியில் பணம் செலுத்தியுள்ளார். ஆனால் அதன் பிறகும் கடனை அடக்கவில்லை எனக் கூறி, சீனிவாசனின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆன்லைன் செயலி நிறுவனம் அனுப்பி உள்ளது. பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலையும், ஆன்லைன் செயலியால் ஏற்பட்ட அவமானத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’

‘ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் எங்கெல்லாம் கடன் வாங்கி அவமானப்படுவார்கள் என்பதற்கு சீனிவாசன் தான் மோசமான எடுத்துக்காட்டு. 31 வயதில் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் அவரது மனைவி, 8 மாத குழந்தை ஆகியோர் ஆதரவற்றவர்களாகி உள்ளனர். சூதாட்ட தடைச் சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகி உள்ள 8வது உயிர் சீனிவாசன். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.’

‘ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ என்று ஏங்கித் தவிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போது உள்ள ஒரே தீர்வாகும். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 6 மாதங்களாகியும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும். ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என்று மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.