130 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி : அனல் மின் நிலையத்தில் பரபரப்பு

குடகி அனல்மின் நிலையத்தில் புகைபோக்கியில் கேபிள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி 130 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் கோல்ஹாரா தாலுகாவில் குடகி அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தியன் பேக் பிரைவேட் லிமிடெட் மூலம் இயங்கும் இந்த அனல் மின் நிலையத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அனல் மின் நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரைச் சேர்ந்த கிஷன்குமார் பரத்வாஜ்(32) என்ற தொழிலாளி பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அனல் மின் நிலையத்தில் உள்ள புகைபோக்கிக் கூண்டில் ஏறி கேபிள் பதிக்கும் பணியில் கிஷன்குமார் பரத்வாஜ் நேற்று மாலை ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிஷன்குமார் 130 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி என்டிபிசிக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். அத்துடன் உயிரிழந்த கிஷன்குமார் பரத்வாஜ் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் பேச்சுவார்த்தை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். தொழிலாளி தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக என்டிபிசி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.