ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 14 பேர் மீட்பு

 ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்று இரவு லிப்ட் இடிந்து விழுந்ததில் மூத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட 15 பேர் சிக்கினர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இன்று காலை 7 மணியளவில், 3 பேர் சுரங்கத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முதலுதவிக்குப் பிறகு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் உள்ளே சிக்கிய 12 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் எஞ்சிய 14 பேர் மீட்கப்பட்டனர். லிப்ட் அறுந்து சுரங்கத்தில் சிக்கியிருந்த 14 பேரை பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். லிப்ட் அறுந்து 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த 14 பேர், 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தனது எக்ஸ் தளத்தில், ” ஜுன்ஜுனுவின் கெத்ரியில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் லிஃப்ட் கயிறு அறுந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடையவும், சுரங்கத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.