தமிழக காவல் துறை பெண் டிஐஜிக்கள் இருவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

தமிழக காவல்துறையைச் சேர்ந்த பெண் டிஐஜிகள் இருவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ஆட்சி பணி மற்றும் இந்திய காவல் பணி ஆகியவை அனைத்திந்திய சேவை பணிகளாக உள்ளன. எனவே மத்திய அரசின் பணிகளுக்கு,  மாநில அரசில் பணி புரியும் அதிகாரிகள் தேவைப்படும் பட்சத்தில் அனுப்பப்படுவார்கள்.  அதே நேரத்தில் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசின் பணிக்கு  அனுப்பப்படமாட்டார்கள். அதேபோல மத்திய அரசிலிருந்து மாநில அரசின் பணிக்கு  அதிகாரிகள் ஏற்கப்படும்  வழக்கம் உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களில் இருந்து  மத்திய அரசு பணிக்கு செல்ல விரும்பும் அதிகாரிகளின் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு  அனுப்பி வைக்கப்படும். அதிலிருந்து  தேவைப்படும் அதிகாரிகளை மத்திய அரசு அழைத்துக்கொள்ளும்.  அதற்கு மாநில அரசு ஒப்புதல் தரும். இந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து பல முக்கிய  ஐஏஎஸ்  அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்றுள்ளார்கள்.  அதேபோல ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்று புகழ்பெற்றுள்ளார்கள். 

அந்த வகையில் தற்போது தமிழக காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பெண் டிஐஜிகள் மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை சரக டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல காஞ்சிபுரம் சரக காவல்துறை டிஐஜியாக இருந்த பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம்  பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இரு அதிகாரிகளும் விரைவில் மத்திய அரசு பணி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.