கரூரில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

கரூரில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் – ஆண்டாள்கோவில் புதூரைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12). அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் அதே பகுதியில் உலா பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 3 பேரும் வீட்டில் விளையாடுவதாக வீட்டில் சொல்லி விட்டு சென்றுள்ளனர். ஆனால், மாலை நேரமாகியும் அவர்கள் மூவரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்தப் பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடி உள்ளனர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை

இந்நிலையில், இரவு 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரின் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த கிணற்றின் அருகே மூன்று பேரின் காலணிகளும் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, மூன்று பேரின் உடல்களையும் இரவு 12 மணியளவில் மீட்டனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த கரூர் நகர காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.