75 சவரன் நகைகள் திருட்டு. 10 வருட உழைப்பு பறிபோனதாக தம்பதி வேதனை

ஓசூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 75 பவுன் நகைகள் திருடு போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் மத்திய பகுதியைச்  சேர்ந்தவர் சதீஷ் நாகராஜன்.  இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர்கள் ஓசூர் மத்திய பகுதியிலுள்ள ராயல் ஆர்கிடெக்ட் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் தங்கள் சொந்த ஊரில் நடைபெற்ற தேர்த் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன் சென்றிருந்தனர். நேற்று மாலை ஓசூர் திரும்பி வந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  அவர்களின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த  பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 75 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ் நாகராஜன் இது குறித்து ஓசூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீஸார் தடயங்களை சேகரித்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

கடந்த பத்து ஆண்டுகளாக பணியாற்றி சிறிது சிறிதாக சேர்த்த பணத்தில் வாங்கப்பட்ட நகைகள் அத்தனையும் திருடப்பட்டு விட்டன.  இதனால் தங்களுடைய  பத்தாண்டு கால உழைப்பு பறிபோய்விட்டது என்று தம்பதிகள் சோகம் பொங்கத் தெரிவித்தனர். இவர்களின் குடியிருப்பு பகுதியில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதிலும் அவை செயல்படாததால் திருடர்கள் குறித்த துப்பு துலங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.