ஆந்திராவில் பரபரப்பு: கடத்தி செல்லப்பட்ட தெலுங்கு தேசம் வாக்குச் சாவடி முகவர்கள் மீட்பு

ஆந்திர மாநிலத்தில் கடத்திச் செல்லப்பட்ட, தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள் 3 பேர் மீட்கப்பட்டதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி வாக்குச் சாவடி முகவர்கள் 3 பேர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளால் கடத்திச் செல்லப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட முகவர்கள், பிலேரு பகுதியிலிருந்து மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா, ‘புங்கனூரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சித்தூர் மாவட்டம், சதும் மண்டலத்தில் உள்ள பொகரமண்டா கிராமத்தில் இருந்து தெலுங்கு தேசம் (டிடிபி) கட்சி முகவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஜெகன் மோகன் ராஜு அளித்த புகாரில் 188, 189 மற்றும் 199 வாக்குச் சாவடிகளுக்கான டிடிபி முகவர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவர்களை கடத்தியதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் போலீஸார், தேர்தல் அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்ட முகவர்கள் பிலேருவில் இருந்து மீட்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிடிபி முகவர்களை கடத்தியவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகள், 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.