அட்சய திருதியை நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை – கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகரிப்பு

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, ‘அட்சய’ திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். அனைத்து நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் இந்த திருதியை நாளன்று, வாங்கும் பொருள் இல்லங்களில் அளவில்லாமல் சேரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது.

அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளும் அறிவித்தன. பவுனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, பழைய நகைகளுக்கு கூடுதல் விலை, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி என சலுகைகள் அறிவிக்கப்பட்டன. கூட்டம் அதிகம் குவியும் என்பதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகைகடைகள் நேற்று அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில், நகைகடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

அதேபோல், ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, ஜோயாலுக்காஸ், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், பீமா கோல்ட் ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, கல்யாண் ஜூவல்லர்ஸ், போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஆகிய கடைகளில் அட்சய திருதியை முன்னிட்டு காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது. நகைகடைகளில் குறிப்பிட்ட நேரத்தில், நகைகளை வாங்குவதற்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, 75 சதவீத தொகை செலுத்தி பலர் முன்பதிவு செய்து, நகைகளை நல்ல நேரத்தில் வாங்கினர். விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் அட்சய திருதியை நாளில் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் அணிந்துக்கொண்டனர்.

பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது. நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அட்சய திருதியை விற்பனை தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:- சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தேர்தல் நடைமுறை அமலில் இருந்தபோது, பொதுமக்களால் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது, அந்த நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், அட்சய திருதி நாளில் மக்கள் அதிகளவு நகைகளை வாங்க குவிந்தனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்கம் உள்பட நகைகள் விற்பனை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்று கூறினார். இதன்மூலம், ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தங்கம் உள்பட பல்வேறு நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.