கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி : இரா.முத்தரசன் பேட்டி

”பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரமே இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்துள்ளது” என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் இன்று  நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த கட்சியின்  மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை கூறிய நிலையில் அவருக்கு இடைக்கால ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கலாம் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பங்கேற்கக் கூடாது என மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி சிறையில் அடைத்தது. இந்த சூழலில்தான் கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம்.

மக்களவைத் தேர்தலில் எந்த பிரதமரும் மோடி போல் தரம் தாழ்ந்த முறையில் பிரச்சாரம் செய்ததில்லை. மோடியின் பரப்புரை இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்துள்ளது. அவரது பேச்சு குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தாலும் ஆணையம் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு முன்பு தேர்தல் ஆணையம் இதுபோல்  நடந்தது கிடையாது.

வாக்குப் பதிவு விவரங்கள் வெளியிடுவதில் தொடர்ந்து குளறுபடி இருந்து வருகிறது. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களின் நம்பகத்தன்மை கேள்விகுறியாகி உள்ளது. இது  கவலைக்குரிய விஷயம். தேர்தல் ஆணையத்தின் மீது மக்களிடம் உள்ள நம்பகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும்.

சவுக்கு சங்கர் போன்றவர்கள் பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெறும் தேர்தல் சர்வாதிகாரத்திற்கு எதிரான, பாசிசத்திற்கு எதிரான தேர்தல். அதனால் தான் கேஜ்ரிவால் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதற்கு பதிலடி கொடுத்துத்தான் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது” என்று முத்தரசன் தெரிவித்தார்.