உத்தரபிரதேசத்தில் கொடூரம் : தாய், மனைவி, பிள்ளைகளை கொலை செய்த நபர் தற்கொலை

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த செய்தி அந்தப் பகுதியில் அதிர்வலையை எழுப்பியுள்ளது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனுராக் சிங் என்பவர் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார்.

அவர் தனது தாய், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை கொலை செய்த பின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று அன்று பாலாபூர் என்ற கிராமத்தில் அரங்கேறியுள்ளது. அனுராக் சிங், மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளானது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அவருக்கு மன ரீதியான பாதிப்பு இருந்து வந்ததாகவும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

தனது தாயை துப்பாக்கியால் சுட்டும், மனைவியை சம்மட்டி கொண்டு தாக்கியும், மூன்று பிள்ளைகளை வீட்டின் மாடியில் இருந்து தூக்கி எறிந்தும் கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சீதாப்பூர் காவல் துறை எஸ்.பி சக்ரேஷ் மிஸ்ரா, “45 வயதான அனுராக் சிங் எனும் நபர் தனது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தோம்.

அங்கு 60 வயதான அவரது தாய், 40 வயதான அவரது மனைவி, முறையே 12, 9, 6 ஆகிய வயதுடைய அவரது மூன்று பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு இருந்தனர். அவரும் தற்கொலையால் உயிரிழந்திருந்தார். போலீஸார் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.