டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் – தேர்தல் பிரச்சாரம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களவைத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தியாவில் தேர்தல் வருடம் முழுவதும் நடைபெறுகின்ற காரணத்தால் கேஜ்ரிவாலுக்கு பிரச்சாரம் செய்ய ஜாமீன் வழங்குவது அரசியல்வாதிகளின் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இந்த வழக்கில் அமலாக்கத் துறை வாதிட்டது. இதற்கு, கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர். வரும் ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டி உள்ளது.

இந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் 25-ம் தேதி டெல்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

அமலாக்கத் துறை எதிர்ப்பு : அமலாக்கத் துறை சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், கேஜ்ரிவாலை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில், “தேர்தல் பிரச்சார உரிமை, அடிப்படை உரிமையோ, அரசியல் சாசன உரிமையோ அல்லது சட்டப்படியான உரிமையோ அல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்காக இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை.

நாட்டில் ஆண்டு முழுவதும் எங்காவது ஓர் இடத்தில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டில் 124 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்காக, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைக்க முடியாது. இந்த தேர்தலில் கேஜ்ரிவால் போட்டியிடவும் இல்லை. எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது” என்று அமலாக்கத் துறை கூறியிருந்தது. இந்தப் பின்னணியில், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தற்போது இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.