அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் : மத்திய அரசை வலியுறுத்தும் மருத்துவர்கள் குழு

அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மருத்துவர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டனின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா, தங்களது கொரோனா தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியை, இந்தியாவில் `கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்தது.

இந்தியா மற்றும் பிற நாடுகளில் இந்த தடுப்பூசியை ஏராளமானோர் செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தடுப்பூசியால் மூளையில் ரத்தம் உறைதல், ரத்தத் தட்டணுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் அரிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவர்கள் குழு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து இந்தியாவை சேர்ந்த மருத்துவ குழுவினர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். ‘விழித்தெழு இந்தியா இயக்கம்’ (ஏஐஎம்) என்ற அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இந்த அமைப்பை சேர்ந்த ரேடியாலஜிஸ்ட் நிபுணர் மருத்துவர் தருண் கோத்தாரி, “கொரோனா தடுப்பூசிக்குப் பிந்தைய கொடிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசாங்கம் முற்றாகப் புறக்கணித்து வருகிறது. மேலும் அறிவியல் ஆய்வின்றி, கொரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பானது, பயனுள்ளது என தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. எனவே, அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் மறுபரிசீலனை செய்யவும், அவற்றின் வணிகமயமாக்கல் மற்றும் தடுப்பூசியின் பாதகமான நிகழ்வுகள் குறித்து அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.