கேரளாவில் ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி  

கேரளாவில் ஒரே பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 13 இரட்டையர்களும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடியாத்தூர் கிராமம் ஏற்கெனவே பலமுறை செய்திகளில் கவனம் ஈர்த்த ஊராகும். இந்த ஊரில் ஏராளமான இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதும், அவர்கள் அங்குள்ள கொடியாத்தூர் பிடிஎம் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருவதும் பலமுறை செய்திகளில் பதிவாகியுள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.

நேற்று மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இந்தப் பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இந்த பள்ளி மாவட்ட அளவில் மற்றுமொரு சாதனையும் படைத்துள்ளது. அதிகப்படியான மாணவர்கள் இந்த பள்ளியில் இருந்து இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர்.

அதாவது 877 மாணவர்கள் ஒரே நேரத்தில் இந்தப் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதி உள்ளனர். தற்போது, தேர்வில் வெற்றிபெற்ற இரட்டையர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தேர்வு எழுதிய இந்த 26 மாணவர்களில் முகமது அஜாத் என்பவர் மாநில அளவிலான கால்பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.