சென்னையில் பரபரப்பு அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கத்தினர்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைதுசெய்யப்பட்டனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழு சார்பாக இன்று அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதனால் அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சிக்னல் அருகே 20 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு ஒன்று கூடிய 20 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக பாதகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் கைதான மாணவர்கள் அனைவரையும் போலீஸார் அருகில் உள்ள சமூக நலக்கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், “போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது. பெண் மாணவிகளை தூக்கி செல்லும் போது ஆண் காவலர்கள் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்டனர். பெண் காவலர்கள் இருந்தும் மாணவிகளை இழுத்து சென்ற ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.