சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார் : தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு

மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்ததால் கடுப்பான வாகன ஓட்டி ஒருவர், கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடி ஊழியரை காரால் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இந்த சுங்கச் சாவடியை அங்கிருந்து அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்களில் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி செல்லும் பதிவு எண் இல்லாத வாகனங்களும், வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களும், திருமங்கலம் நகர் பகுதி வாகனங்கள் என்று பொய் சொல்லி கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கை. இது போன்ற வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்தும்படி கூறும்போது, இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில், இன்று கப்பலூர் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்ததால் கடுப்பான வாகன உரிமையாளர் ஒருவர், கட்டணம் செலுத்தாமல் காரை எடுத்துச் செல்ல முயன்றார். இதைப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர், கார் முன்பாக நின்று கட்டணத்தை செலுத்தி விட்டுச் செல்லும்படி தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த கார் உரிமையாளர், அந்த ஊழியர் மீது காரை விட்டு மோதினார். இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஊழியரை, சக ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் எதிரொலியாக, தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, காவல்துறையிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் இருக்க கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றிலுமாக அகற்றுவது அல்லது இடமாற்றம் செய்வது தான் ஒரே வழி என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.