கழிப்பிட வசதி இல்லாமல் புதுச்சேரி கடற்கரையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார விடுமுறை நாட்கள் மட்டுமில்லாமல், பொது விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகரில் பிரெஞ்சு காரர்கள் வசித்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், தெருக்களை பார்த்துவிட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம்.

புதுச்சேரி கடற்கரைக்கு வருவோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கழிப்பிடங்கள்தான். ஏராளமாக சுற்றுலாவுக்கு செலவிடும் சுற்றுலாத்துறை கழிப்பிடம் கட்டுவதில் கஞ்சத்தனம் காட்டுகிறது. புதுவை கடற்கரை சாலையில் கார்கில் நினைவுச் சின்னம் மற்றும் கலவைக் கல்லூரி அருகே அமைக்கப்பட்ட ‘பயோ டாய்லெட்கள்’ செயலிழந்து விட்டன. இதில் ஒரு கழிப்பறை தலைமைச் செயலகம் எதிரேயே அமைந்துள்ளது.

கடற்கரைச் சாலையில் இரு முனைகளிலும் இரு கழிப்பிடங்கள் உள்ளன. ஒன்று பழைய சாராய வடி ஆலை பகுதியிலும், மற்றொன்று டூப்ளக்ஸ் சிலை அருகிலும் உள்ளன. சுற்றுலா பயணிகள் இருமுனைகளுக்கு சற்று ஒதுங்கியுள்ள இப்பகுதிகளுக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். அத்துடன் கட்டணமும் அதிகமாக வசூலிப்பதாக புகாரும் உள்ளது. இதுதொடர்பாக அடிக்கடி இங்கு தகராறும் ஏற்படுகிறது. இதனால் அழகான ஒயிட் டவுன் பகுதியில் மறைவான இடங்களில் சிறுநீர் கழிப்பது அதிகரித்துள்ளது.

இதுபற்றி ஒயிட் டவுன் பகுதியில் வசிப்போர் கூறுகையில், கடந்த 2018-ல் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத பகுதியாக புதுச்சேரி நகரம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை தொடர்ந்து பராமரிக்கும் வகையில், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கடற்கரையில் கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது என்றனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூறுகையில், கடற்கரைக்கு குடும்பத்துடன் வருகிறோம்.

குழந்தைகள், பெண்களுக்கு கழிப்பிட வசதி இங்கு முற்றிலும் இல்லை. கடற்கரை காந்தி சிலை, தலைமைச் செயலகம் பகுதி மற்றும் நடுவே மற்றொரு இடத்தில் கழிப்பறை அமைப்பது அவசியம். ஆண்கள் பலரும் கடற்கரையோரம் சிறுநீர் கழிப்பது சுகாதாரமற்றதாக உள்ளது. கடற்கரையில் மணல் பரப்பு எங்கும் குப்பைகள் பரவி கிடக்கின்றன. தூய்மையாகவும் இல்லை. மக்கள் வருகைக்கு ஏற்ப கழிப்பிட வசதி ஏற்படுத்துவது மிக அவசியம் என்று தெரிவித்தனர். கடற்கரையோரம் சிறுநீர் கழிப்பது சுகாதாரமற்றதாக உள்ளது.