கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் – அமைச்சர் துரைமுருகன்

காவிரி மேலாண்மை வாரியம் சொன்ன பிறகும் காவிரியில் தண்ணீர் திறக்காமல் உள்ள கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றத்தை நாடி தீர்வு பெறுவோம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தொழிலாளர் நினைவுத்தூணுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்பி- கனிமொழி உள்ளிட்டோர் இன்று மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் மே தின சிறப்புகள் குறித்து பேசினார்.

பின்னர் அவரிடம் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்ததாவது: என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்துவிடுகிறோம் என சொல்லியிருக்கிறார்களா? இல்லை. அதிகமான தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி நீர் மேலாண்மை வாரியம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று சொன்ன பிறகும் திறக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள். இப்படி மத்திய அரசை மதிக்காமல் இருப்பது கர்நாடகா அரசு. இதை கேள்வி கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம். அதை நாடுவோம்”. என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.