நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது : விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இந்தாண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும், மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ் எனவும் விசிக பாராட்டியுள்ளது.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கி சிறப்பித்து வருகிறோம். 2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தாரமையா, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜுக்கும், பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழிக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம். விசிக விருதுகள் வழங்கும் விழா 25.05.2024 அன்று சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

2024-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு : அம்பேத்கர் சுடர் – பிரகாஷ்ராஜ், திரைப்படக் கலைஞர், பெரியார் ஒளி – வழக்கறிஞர் அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம், மார்க்ஸ் மாமணி – இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காமராசர் கதிர் – பேராயர் எஸ்றா சற்குணம், தலைவர், இந்திய சமூக நீதி இயக்கம், அயோத்திதாசர் ஆதவன் – பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை – எஸ்.என். சிக்கந்தர், மேனாள் மாநிலத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, செம்மொழி ஞாயிறு – எ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர்