சென்னையில் ஒரே வாரத்தில் 36 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் : போலீஸ் நடவடிக்கை

சென்னையில் கடந்த 7 நாட்களில் 36 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவலில், “சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் இதுவரை (ஏப்.8) சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 208 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 70 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 104 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 22 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 3 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 9 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 4 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 423 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல். கடந்த 22.04.2024 முதல் 28.04.2024 வரையிலான 7 நாட்களில் 36 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இந்த 36 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொள்ளை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.