“தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சொதப்பிவிட்டது” – காரணங்கள் அடுக்கும் ஜெயக்குமார்

“தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இதை பார்க்க வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், சென்னை மண்டல பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், நட்சத்திரப் பேச்சாளர்கள் அனைவரையும் அழைத்து மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக இந்த தேர்தலைச் சந்தித்த விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இதை பார்க்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போது நூறு சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு. எனவே, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை.

நூறு சதவீத வாக்குப்பதிவை அடைய எந்தவொரு வாக்காளரது பெயரும் விடுபடாமல் இருக்கும் ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்று கட்சியின் சார்பில் பலமுறை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் அதை செய்யவில்லை. பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் சென்னையில் வாக்களிக்காமல் திரும்பியவர்கள் எத்தனை பேர்? வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பதிலளிக்க வேண்டிய கடமை இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

இந்த முறை நடந்தது போன்று எந்த காலத்திலும் ஏற்பட்டது இல்லை. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் சொதப்பிவிட்டது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியிடப்பட்ட வாக்கு சதவீதத்துக்கும், பின்னர் அறிவிக்கப்பட்ட சதவீதத்துக்கு வித்தியாசம் இருக்கும்போது தேர்தல் ஆணையம் செயல்பட்டதா இல்லையா என்றொரு கேள்வி எழுகிறது.

எனவே, அது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராத வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பிரதமரின் ராஜஸ்தான் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுகவைப் பொறுத்தவரை, வெறுப்பு அரசியல், மத வெறுப்புப் பேச்சு ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே அதுபோன்ற பேச்சுகள் மிக மிக கண்டனத்துக்குரியது. இந்தியா என்பது ஜனநாயக நாடு. இதுபோன்ற பேச்சுகளை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று ஜெயக்குமார் கூறினார்.