மணமேல்குடி அருகே தவ்ஹீத் ஜமாத், அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு அம்மாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் 2வது இரத்ததானம் முகாம் வடக்கு அம்மாபட்டினம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் சபியுல்லா மற்றும் கிளை நிர்வாகிகள் இமாம்தீன், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த முகாமில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவ தகுதி அடிப்படையில் 30 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும் மருத்துவர். ராதாகிருஷ்ணன்  சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர்  சபியுல்லா நன்றியுறை நிகழ்த்தினார். அவர் கூறும்போது “ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்.

இறுதியாக, இம்முகாமில் பங்களிப்பு செய்த அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் இரத்த வங்கி மேலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன்  மற்றும் அவரது மருத்துவ குழுவிற்கும், இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி சகோதரர்கள் ஆகியோருக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும், கிளை நிர்வாகி ரஹ்மத்துல்லாஹ்  வடக்கு அம்மாப்பட்டினம் கிளை நிர்வாகம் சார்பாக நன்றியினைத் தெரிவித்தார்.