திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி : 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை ஒட்டி ஏப்.23, 24-ல் 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் சாமி தரிசனத்துக்கு பின்னர் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை மற்றும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்தாண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது.

இதையொட்டி திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. கோயிலுக்குள் வழக்கமாக உள்ள ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் முற்றிலும் ரத்து என திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.