“கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது தமிழகம்” – குற்ற நிகழ்வுகளை அடுக்கிய அண்ணாமலை

“தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல் துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, இன்று, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், வெளிவந்த செய்திகள், பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல் துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை?

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், மூன்று ஆண்டுகளாகக் கோட்டை விட்டது போல், கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.” என்று கூறியுள்ளார்.