மோடி ஆட்சியில் ‘ரெயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது – ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது என காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்.பி-யான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வடமாநிலத்தில் ரயில் ஒன்றின் கழிவறையில் படுத்து பயணிகள் பயணிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ரயில் கூட்டமாக இருப்பதாக ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்ட பயணி ஒருவருக்கு 20-ம் தேதி ரயில்கள் காலியாக இருப்பதாக புகைப்படம் பதிவிட்ட ரயில்வே நிர்வாகம், போலி தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கூறியிருந்தது. இதுவும் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் ரயில் கழிவறையில் படுத்தபடி பயணிகள் பயணிக்கும் வீடியோவை, தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது. சாமானியர்களின் ரயில்களில் இருந்து ஜெனரல் கோச்சுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, ‘எலைட் ரயில்களை’ மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசில், ஒவ்வொரு வகுப்பு பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற்ற பிறகும் மக்கள் தங்கள் இருக்கைகளில் வசதியாக உட்கார முடியாது; சாமானியர்கள் தரையிலும், கழிப்பறைகளிலும் பதுங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மோடி அரசு, அதன் கொள்கைகள் மூலம், ரயில்வேயை பலவீனப்படுத்தி, அதை ‘திறமையற்றது என்று நிரூபிக்க விரும்புகிறது. இதனால் அதை தனது நண்பர்களுக்கு விற்க ஒரு சாக்கு கிடைக்கும். சாமானியர்களின் பயணத்தை காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வேயை சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.