ஜனநாயக கடமையைச் செய்த உலகின் மிகவும் குள்ளமான நபர் : ஜோதி ஆம்கேவுக்கு குவியும் லைக்குகள்

உலகின் மிகவும் குள்ளமான மனிதரான ஜோதி ஆம்கே தனது வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்று துவங்கி வருகிற ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது, தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாக்பூர் தொகுதியில், உலகின் மிகவும் குள்ளமான மனிதர் என கின்னஸ் உலக சாதனை படைத்த ஜோதி ஆம்கே தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். நான் படித்த பள்ளியிலேயே வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும் நாம் நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்து தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

30 வயதான ஜோதி ஆம்கே, 62.8 சென்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்டவர் ஆவார். மிகவும் அரிதான மரபணு பிரச்சினை காரணமாக அவர் சிறு வயது முதலே உடல் வளர்ச்சி இன்றி உயரம் குறைவாக இருந்து வருகிறார். இருப்பினும் உலகம் முழுவதும் பயணித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.