சிவகங்கை பாராளுமன்ற தொகுதி தேர்தல் களத்தில் முன்னேறி வரும் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ்

சிவகங்கை சீமை என்றதும் ராணி வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர் மருதுபாண்டியர்கள், வீரத்தாய் குயிலி போன்றோரின் வீரம் எக்காலத்திலும் போற்றத்தக்கது. இவர்கள் சிவகங்கையின் அடையாளங்கள் என்றே கூறலாம்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பொறுத்தவரை எம்.பி.யாக தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே களம் இறங்கி உள்ளார். பா.ஜனதா கூட்டணி சார்பில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், அ.தி.மு.க. சார்பில் பணங்குடி சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

இந்த முறை கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு நிலவியது. மேலும் கார்த்தி சிதம்பரம் கிராமப்புறங்களுக்கு சென்று மகளிருக்கு ஆயிரம் ரூபாய், 100 நாள் வேலைத் திட்டம், ஏழைப் பெண்களுக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்பதையெல்லாம் சொல்லி வாக்கு கேட்கிறார். ஆனால் மக்கள் கார்த்திக் சிதம்பரத்தை எதிர்த்து கேள்விக்கணைகளை தொடுத்துவருகிறார்கள். பல கிராமங்களில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிர்ப்பு இருப்பதால் வாக்கு சேகரிக்க முடியமால் திணறிவருகிறார்.

காங்கிரஸ் வேட்பாளரான தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்கு கேட்டு சென்ற ப. சிதம்பரத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தேர்தல் களமானது பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த சிவகங்கை மக்களை தேவநாதன் யாதவ் நேரில் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார். அண்ணாமலையின் தீவிர பிரசாரம், மோடியின் திட்டங்கள், களத்தில் தீவிர வேலைப்பாடு, கூட்டணியின் பலம் என தேர்தல் களத்தில் முன்னேறி வருகிறார் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ்.