இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க மூன்றாம் பாலினத்தவர் புள்ளிவிவரத்தை சேகரியுங்கள் : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

கடந்த மார்ச் 4ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், மூன்று மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “கணக்கெடுப்பின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உரிய முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதி நீக்கப்பட்ட பின் 3 மாதங்களில் மூன்றாம் பாலினத்தவரின் புள்ளி விவரத்தை சேகரிக்க வேண்டும். ஏற்கெனவே சலுகை வழங்கப்பட்டு இருந்தால் அதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.