கட்டுப்பாட்டை இழந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து : ஆசிரியர் உட்பட இருவர் பலியான சோகம்

தஞ்சை அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த லாரி மீது மோதிய விபத்தில், ஆசிரியர் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபா பொன் பாண்டியன் (34). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று திருச்சியில் தனது நண்பரை பார்ப்பதற்காக அவர் கார் மூலம் சென்றிருந்தார். இன்று காலை திருச்சியில் இருந்து அவர் மீண்டும் தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் தஞ்சாவூர் அடுத்த வல்லம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பைத் தாண்டி எதிர் திசைக்கு சென்ற கார், அங்கு எதிரில் மீன் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பொன் கிருபா பாண்டியன் உயிரிழந்தார். லாரியில் பயணித்துக் கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த ஓட்டுநர் நெடுஞ்செழியன் (32) மற்றும் அவருடன் பயணித்த மேத்யூ (26) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள மேத்யூவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.