வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : தேர்தல் புறக்கணிப்பு ஈடுபட இருப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாரையும் இதுவரை கண்டுபிடிக்காததைக் கண்டித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ல் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் ரீதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மனித கழிவு மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும், சந்தேகத்தின் பேரில் 30-க்கும் மேற்பட்டோரிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதற்கட்ட முயற்சியில் குற்றவாளிகள் யாரென கண்டறிய முடியவில்லை. இதைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேரிடம் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 3 பேருக்கு நடத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இதுவரையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என கண்டறியப்படவில்லை. இதனால் இந்த பிரச்சினையானது இரு சமூகங்களுக்கு இடையான பிரச்சினையாக மாறியது. மனிதக் கழிவை கலந்தவர்கள் யாரென விரைவாக கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி வேங்கைவயல் மற்றும் இறையூர் மக்கள் தனித்தனியாக போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை கண்டறிந்து விரைவாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சமயத்தில் இறையூர் பகுதி மக்கள் ஊருக்குள் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் பிளக்ஸ் பேனரை வைத்திருந்தனர். அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறி வெளளனூர் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் பேனர்களை கைப்பற்றிச் சென்று விட்டனர்.

இதைத்தொடர்ந்து குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் வேங்கைவயல் மக்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று பிளக்ஸ் பேனரை வைத்து தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். தேர்தல் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதுகுறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.