டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : இரண்டு இலக்க உயர்வால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

இந்த ஆண்டின் தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த டிசிஎஸ் மென்பொருள் நிறுவனம் நாட்டின் பிற ஐடி நிறுவனங்களைப் போல் அல்லாமல் ஒவ்வொரு வருடமும்  அதன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திலும்கூட ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அந்தவகையில்  இந்த வருடமும் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி பணியில் சிறந்து விளங்கும்  ஊழியர்களுக்கு இரண்டு இலக்கு ஊதிய உயர்வையும், பிற ஊழியர்களுக்கான  வழக்கமான ஊதிய உயர்வையும்  இம்மாதம் மாதம் முதல் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவன ஊழியர்களிடம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

டிசிஎஸ்  நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்கட் இது குறித்து “ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் செய்து வருவதுபோல், இந்த ஆண்டும் எங்கள் ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். டாப் பர்பாமென்ஸ் ஊழியர்கள் இரண்டு  இலக்கு சம்பள உயர்வைப் பெறுவார்கள்” என்று  அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை தவிர்த்துப் பிற ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் 4.5% முதல் 7% வரை இருக்கும் என்றும்.அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த ஆண்டு சுமார் 40,000 பேரை புதிதாக பணியில் அமர்த்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதில் பெரும்பாலானோர் முந்தைய நிதியாண்டின் சுழற்சிகளிலிருந்து ஏற்கனவே பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மிலிந்த் லக்கட் தெரிவித்துள்ளார்.