கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, சிவமோகா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கர்நாடகாவின் ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ.கந்தேஷ் போட்டியிட வாய்ப்பு கோரி இருந்தார். எனினும், மாநில பாஜக தலைவர் பி.ஓய்.ராகவேந்திரா வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ஈஸ்வரப்பா, ராகவேந்திராவுக்கு எதிராக கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். மேலும், ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகவும் ஈஸ்வரப்பா அறிவித்தார்.

அவரை சமாதானப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். மனைவி ஜெயலட்சுமி, முன்னாள் அமைச்சர் கூலிஹட்டி சேகர் ஆகியோருடன் சிவமோகாவின் ராமண்ணா ஸ்ரேஷ்டி பூங்காவில் உள்ள பிள்ளையார் கோயிலில் வழிபாடு செய்த ஈஸ்வரப்பா, பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக துணை ஆணையர் குருதத்தா ஹெகடே அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.

ஈஸ்வரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஷ்ட்ரபக்தரா பாலகா (தேசபக்தர்கள் அணி) என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும், பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.