இந்திய ராணுவத்திற்கு ரூ.65,000 கோடியில் ஜெட் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

97 ‘எல்சிஏ மார்க் 1 ஏ’ ஜெட் போர் விமானங்களை வாங்குவதற்கு ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு 97 ‘எல்சிஏ மார்க் 1 ஏ’ போர் விமானங்களை வாங்குவதற்கு ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பொதுத் துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம், சமீபத்தில் ஒப்பந்த ஆணை வழங்கியது.

இதற்கு பதிலளிக்க அந்நிறுவனத்துக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உள்நாட்டு ராணுவ விமான கொள்முதலுக்கான மிகப்பெரிய ஒப்பந்தமாக அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தமானது, இந்திய விமானப்படை தனது ‘மிக்-21’, ‘மிக்-23’ மற்றும் ‘மிக்-27’ விமானங்களை மாற்றுவதற்கு உதவும். இந்த விமானங்கள் படிப்படியாக வெளியேற்றப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமான உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் விமானப்படை தலைமையகம் முழு ஆதரவு அளிக்கிறது.

நாடு முழுவதும் பாதுகாப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்பை வழங்குவதற்கு இது ஒரு பெரிய ஊக்கமாக அமையும். எச்ஏஎல் நிறுவனம் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் உள்நாட்டு போர் விமானத் திட்டத்தின் ஆய்வுக் கூட்டத்தை விமானப்படை தலைமை நடத்தியது.

இதைத் தொடர்ந்து புதிதாக 97 ‘எல்சிஏ மார்க் 1 ஏ’ விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘எல்சிஏ மார்க் 1ஏ’ விமானம் விமானப்படைக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 40 ‘எல்சிஏ’ விமானங்களை விட மேம்பட்ட மின்னணு சாதனங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ரேடார்களைக் கொண்டுள்ளது.