சென்னையில் பணிபுரியும் காவலர்கள் இன்று முதல் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்

சென்னையில் பணிபுரியும் காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை இன்று முதல் செலுத்துவதற்கான  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து காவலர்கள் பணிபுரிகிறார்கள். தேர்தல் பணிகளுக்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து காவலர்கள் சென்னைக்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி சென்னை மாநகர காவல் துறை சார்பில் காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.  காவலர்கள் இன்று முதல் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் தபால் வாக்கு செலுத்த சிறப்பு தபால் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காவலர்கள் வியாழன், வெள்ளி மற்றும் சனி (ஏப். 11, 12, 13)  ஆகிய நாட்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம்.

வடசென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காவலர்கள் வண்ணாரப்பேட்டை, பேசின் பாலம் சாலையில் உள்ள வடக்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில் வாக்குகளைச் செலுத்தலாம்.

மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், சிதம்பரம், புதுச்சேரி ஆகிய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காவலர்கள் செனாய் நகர், புல்லா அவென்யூ, 2-வது குறுக்குத்தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தபால் வாக்கு செலுத்தும் காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்க வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.