2 திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை அழித்து விட்டன : நடிகை ராதிகா குற்றச்சாட்டு

“தமிழ் நாட்டை இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து அழித்து விட்டார்கள்” என்று நடிகையும், விருதுநகர் பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “விருதுநகர் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் பெற்றோர்கள் உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையை போக்க வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். தாமரை மலர்ந்தால் இந்த விருதுநகரும் மலரும். தமிழ் நாட்டை இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து அழித்து விட்டார்கள். ஆகவே என்னை தங்கையாக, தோழியாக, சித்தியாக நினைத்து எனக்கு ஒரு முறை வாய்ப்பு அளிக்க வேண்டும். தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சரத்குமார், “சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும் எனில் பொதுமக்களாகிய நாம்தான் முதலில் மாற வேண்டும். கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு பணம் கொடுத்தால், நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை நாம்தான் தகர்க்க வேண்டும், நாளைய சந்திதி நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

ஒட்டு விற்பனைக்கு அல்ல என்பதை திராவிட கட்சிகள் உணர்ந்தால்தான், தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கும். அந்த காலம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது. மீண்டும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து ராதிகா சரத்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.