திருமங்கலம் அருகே பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மதுரை, திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கனகவேல் தனது குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு  காரில் சென்று  தரிசனம் செய்துவிட்டு இன்று காலை  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர்களது கார் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது  இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரை கவனிக்காமல் திடீரென சாலையை கடக்க முயன்றார். அதனால்  வேகமாக வந்த கார் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாக திரும்பியது. 

ஆனாலும் இருசக்கர வாகனத்தில் மீது மோதிய கார், நிலைகுலைந்து சாலையில் கவிழ்ந்து உருண்டது. இதில் காரில் பயணித்த கனகவேல் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலியான 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்து திருமங்கலம்  காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.