அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை : முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் அஜெண்டா, மாநிலங்களை மாநகராட்சிகள் போல, புதுச்சேரியை கிராம பஞ்சாயத்து போல மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “ஆளுநர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் பிரச்சினைதான். தமிழ்நாட்டு ஆளுநரிடம் நாங்கள் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறோம். காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கி, பாஜகவின் ஏஜெண்டுகளாக மாற்றி, அவர்களை விளம்பரத்துக்காக பயன்படுத்துகின்றனர்.

மாநிலங்களை மாநகராட்சிகள் போல, புதுச்சேரியை கிராம பஞ்சாயத்து போல மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. இதற்கு புதுச்சேரி முதலமைச்சரும் துணை போகிறார். மாநில உரிமை மட்டுமல்லாமல், யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைக்காகவும் இந்தியா கூட்டணி போராடுகிறது.

புதுச்சேரிக்கு புதிது புதிதாக துணை நிலை ஆளுநர்களை வரவழைத்து அரசியல் கூத்தினை அரங்கேற்றி வருகின்றனர். கிரண்பேடி காமெடிகள் முடிந்த பிறகு தமிழிசை சௌந்தரராஜன் வந்தார். அவர் அங்கே ஆளுநராக இருந்துகொண்டு தமிழ்நாட்டு அரசியலை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். தேர்தல் வந்ததும் இப்போ மீண்டும் பாஜகவுக்கே போய்விட்டார்.

ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் அஜெண்டா, அதனால் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல், கார்ப்பரேட்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்.

முதலமைச்சர் ரங்கசாமியை தங்கள் பேச்சை கேட்கச் சொல்லி பாஜகவினர் பாடாய் படுத்துகிறார்கள். ரங்கசாமியை டம்மியாக அமரவைத்துவிட்டு பாஜக பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது. முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவின் கைக்கூலியாக செயல்படுகிறார். பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.