சீமான் மனைவியின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் பலரும்  அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளது சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும்  வேட்பாளர்களை களம் இறக்கி தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வரும் நிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு தொகுதியாக சென்று தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். 

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பது,  கட்சி நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவற்றில் சீமானின் மனைவி கயல்விழியின்  தலையீடு அதிகம் இருப்பதாக கூறி அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் உள்ளிட்ட பலரும் விலகியதால் அக்கட்சிக்கு பலவீனமாக கருதப்பட்டது. 

இந்த நிலையில் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் பலரும் நேற்று இரவு கட்சியில் இருந்து கூண்டோடு விலகி உள்ளனர்.  நாதக தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி தலைவர் மு.ராஜா, பொருளாளர் மு.முருகன், தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் கிஷோர் பிரபாகரன், செய்தி தொடர்பாளர் விக்னேஸ்வரன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து  விலகி உள்ளனர். சீமானின் மனைவி கயல்விழியின் ஆதிக்கம் கட்சிக்குள் மிக அதிகமாகி விட்டதாக இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.