காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு : நீட் தேர்வு மறுபரிசீலனை, சாதி வாரி கணக்கெடுப்பு, 12ம் வகுப்பு வரை இலவச கல்வி

அனைத்து தரப்பினருக்கும் நீதி என்ற அடிப்படையிலான காங்கிரஸின் மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் மக்களிடம் கருத்துக்கள் கேட்டு இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டவருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினருக்கும் நீதி என்ற அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் சிதம்பரம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற வரம்பு அரசியல் சாசனம்  திருத்தப்படும்,  நீட் தேர்வு மறு பரிசீலனை செய்யப்படும், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் அனைத்து தரப்பினருக்கும் 10% இட ஒதுக்கீடு, அரசு பணி  தேர்வுகளுக்கான விண்ணப்ப கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும், ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை இலவச கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.

தன்பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க புதிதாக சட்டம், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை திருத்தம் செய்யப்படும், நாடு முழுவதும் மாணவர்கள் வாங்கியுள்ள கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், கல்விக்கடன் உச்சவரம்பு 7.5 லட்சம் ஆக உயர்த்தப்படும், 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் நாள் ஒன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பாலின பாகுபாடு இல்லாமல் சமவேலைக்கு சம ஊதியம், ஜம்மு, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உட்பட மேலும் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.