திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு : ஏப்ரல் 8 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது, வீட்டுவசதி வாரிய வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை மீண்டும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற உச்சநீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனு மீதான விசாரணை ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.