வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி : ரோடு ஷோவில் பிரியங்கா காந்தியும் பங்கேற்பு – தொண்டர்கள் உற்சாகம்

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமான ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் இடதுசாரி கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இங்கு தனித்தனியாக களம் காண்கின்றன. இடதுசாரிகள் முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் ’பி’ ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், கேரளா காங்கிரஸ் ’ஜே’ ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. பாஜக இங்கு 16 தொகுதிகளிலும், பாரத் தர்மா ஜனசேனா கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதி வேட்பாளராக மீண்டும் ராகுல் காந்தி களமிறங்குகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இங்கு பாஜகவின் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வயநாடு பகுதியில் பிரம்மாண்ட சாலை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராகுல் காந்தி பங்கேற்றார். அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ஆனி ராஜா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கோவை மற்றும் நெல்லையில் ராகுல் காந்தி பங்கேற்று பிரச்சாரம் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.