ஏப்.19 முதல் ஜூன் 1 வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஏப்ரல் 19 காலை 7 மணியிலிருந்து ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக மக்களவைப் பொதுத் தேர்தல்கள், 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மேற்காணும் தேர்தல்களின்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

1951 ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) எந்தவொரு நபரும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

(2) உட்பிரிவு (1)-ன் காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும், அதாவது, (a) ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், எந்தவொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2)(b)ஆம் உட்பிரிவின் விதிமுறைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், ஏப்.19 (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியிலிருந்து ஜூன் 1 (சனிக்கிழமை) மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126 (1) (b) ஆம் பிரிவின் கீழ், மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.