வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தார். 

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி (36). இவர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை  அடுத்து  அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மார்ச் மாதம் 14-ம் தேதி மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை ரத்தநாள கசிவுக்கு  சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதல்வரும்  துரை தயாநிதியின் சித்தப்பாவுமான முதல்வர் ஸ்டாலின் வேலூர் சென்றார். அங்கு சிஎம்சி  மருத்துவமனைக்கு  மனைவி துர்காவுடன் சென்ற ஸ்டாலின், துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள பிரிவுக்கு சென்று அவரை சந்தித்து  உடல் நலம் குறித்து  விசாரித்து அறிந்தார். மருத்துவர்களிடமும் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.