“இந்தியா கூட்டணி மீதான பாஜக அச்சத்தின் வெளிப்பாடுதான் ஐ.டி நோட்டீஸ்” – டி.கே.சிவகுமார்

விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பாஜக குறிவைப்பதாக கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறி, வட்டி மற்றும் அபராதத்துடன் ரூ.1,823 கோடி வரி நிலுவை செலுத்துமாறு அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது; சட்டம் இருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்கு பாஜக அரசின் உத்தரவே காரணம்.

காங்கிரஸ் கட்சியைக் கண்டும், இந்தியா கூட்டணியைக் கண்டும் அவர்கள் அச்சப்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜக கூட்டணியை தோற்கடிக்கப் போகிறது. இதை பாஜக புரிந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் தோல்வி அடையப் போகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தும், அச்சத்தை ஏற்படுத்த அவர்கள் முயல்கிறார்கள்.

வருமான வரித் துறை எனக்கும் நேற்று ஒரு நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கெனவே, முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அக்கட்சிகளை நிதி ரீதியாக முடக்குவதே பாஜகவின் உத்தி. காங்கிரஸை முடக்க வரி பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது பாஜக” என்று குற்றம்சாட்டினார். இது குறித்து வரும் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் பொருளாளர் அஜெய் மக்கான் தெரிவித்தார்.