முதல்முறையாக இணைந்த அம்பானி – அதானி : ‘மஹான் எனர்ஜென்’ நிறுவன பங்குகளை ரூ.50 கோடிக்கு வாங்கிய ரிலையன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களான முகேஷ் அம்பானியும், அதானியும், முதல் முறையாக இணைந்து செயல்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ‘அதானி பவர்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘மஹான் எனர்ஜென்’ நிறுவனம் மின்சாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில்தான் 26 சதவீத பங்குகளை அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ வாங்கியுள்ளது.

மொத்தம் 5 கோடி பங்குகளை ரூ.50 கோடிக்கு ரிலையன்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வரும் அதானியின் மின்சாரத் திட்டத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை ரிலையன்ஸ் பயன்படுத்த இருப்பது உறுதியாகிபோயுள்ளது.

அம்பானியும், அதானியும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக வணிக போட்டியாளர்களாகவே இருந்து வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு, ரிலையன்ஸ் உடன் தொடர்பிலிருந்த ஒரு நிறுவனம், என்டிடிவி பங்குகளை அதானிக்கு விற்றுது பேசுபொருளானது. அதே ஆண்டு ‘5ஜி’ அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க அதானி குழுமம் விண்ணப்பித்தது சர்ச்சையானது. ஏனென்றால், தொலைத்தொடர்பு வணிகத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனம் கோலோச்சி வரும் நிலையில், அதற்கு போட்டியாக அதானி களமிறங்குறாரோ என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஏலத்தில் சிறிய அளவில் தனது கம்பெனிக்காக அலைக்கற்றையை வாங்கினார் அதானி. இதனால் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் தற்போது அம்பானியும், அதானியும் முதல்முறையாக இணைந்து செயல்பட உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.