ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் : தேர்தல் பிரசார வீடியோவை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகளைப் பிரித்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

இதையொட்டி அரசியல் பிரசாரத்தையும் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில்,” அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே, உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாட்டை காப்போம்.

நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கி அடிப்போம். வாக்களிப்பீர் இரட்டை இலை” என்று தெரிவித்துள்ளார்.