”எனது தந்தைக்கு தலைக்குனிவு வந்துவிடக் கூடாது என்று அரசியலுக்கு வந்தேன் ” – மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துரை வைகோ உருக்கம்

“எனது அப்பாவுக்கு தலைக்குனிவு வந்துவிடக் கூடாது என்று அரசியலுக்கு வந்தேன். எனது அப்பாவுக்காகவும், எனது கட்சிக்காரர்களுக்காகவும் போட்டியிடுகிறேன். இந்த கட்சிக்காக 30 ஆண்டுகள் உழைத்து உழைத்து தேய்ந்துவிட்டார் எனது தந்தை” என்று திருச்சியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துரை வைகோ கண்ணீர் மல்க பேசினார்.

மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி தொகுதி வேட்பாளருமான துரை வைகோ தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “எனது அப்பாவுக்கு தலைக்குனிவு வந்துவிடக் கூடாது என்று நான் அரசியலுக்கு வந்தேன். கடந்தமுறை சட்டமன்றத் தேர்தலின்போது சாத்தூர் தொகுதி கேட்டபோது, முதல்வர் ஸ்டாலின், வைகோ மகன் கேட்பதால் திமுக கூட்டணியில் சாத்தூர் தொகுதி கொடுக்கப்பட்டது.

அப்போதுகூட அந்த தொகுதியைப் பெற்று டாக்டர் ரகுராமுக்குக் கொடுத்தேன். இப்போதுகூட மதிமுக நிர்வாகக்குழுக் கூட்டத்தில் பூமிநாதன் உட்பட வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூறினார். துரை வைகோதான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று. ஆனால், நான் ஒரு 7,8 பேரின் பெயர்களை பட்டியலிட்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும்படி கூறினேன். அவர்களுக்காக நான் வேலை பார்ப்பதாகக் கூறினேன். எனக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறினேன்.

விருப்பமே இல்லாமல் கட்சிக்காக நான் அரசியலுக்கு வந்தேன். எனக்கு வெற்றி பெற வேண்டும் என்று பெரிய வேட்கை கிடையாது. ஆனால், எனது அப்பாவுக்காகவும், எனது கட்சிக்காரர்களுக்காகவும் போட்டியிடுகிறேன். இந்த கட்சிக்காக 30 ஆண்டுகள் உழைத்து உழைத்து தேய்ந்துவிட்டார் எனது தந்தை. தேர்தலில் செத்தாலும் எங்களது சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

நான் ஒரு சுயமரியாதைக்காரன். அண்ணா, கருணாநிதி கட்சி திமுக. எனது தந்தையும் திமுகவில்தான் இருந்தார். கருணாநிதியை உயிரளவு நேசித்தார். இதே உதயசூரியன் சின்னத்தில்தான் எனது தந்தையும் போட்டியிட்டார். நாங்கள் திமுகவையும், மறைந்த முதல்வர் கருணாநிதியையும் உயிராக நேசிக்கிறோம். உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், மதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியின் சின்னத்தில் நான் நிற்க முடியாது” என்று துரை வைகோ பேசினார்.